வியாழன், 19 மே, 2011

போட்டோ எடுக்க வேண்டாம்- PLEAS DONT TAKE CAMERAS IN SIDE THE.......

‎20 வருடங்களுக்குப்பின் 2003ம் ஆண்டில் ஒரு நாள் எனது கிராமத்துக்கு திருபம்பிச்சென்றேன். கடற்கரை மண்மேடுகளையும் மனித உறவுகளையும் தவிர கிராமத்து வாழ்க்கை முறையில் பெரிய மாற்றங்கள் கண்ணில் படவில்லை. இந்தப் பதிவில் வரும் சிறுவர்கள்போல நானும் மு...ன்பிருந்தேன். அதே மரத்தடி வைரவர் கோவிலில் விளையாடித் திரிந்திருக்கிறேன் இந்த வைரவர் கோவில் சிங்கள வைரவர் கோவில் எனவும் அதன் அருகில் தவறணையோடு சேர்ந்தாற்போல் உள்ள வெட்டைவெளி பண்டாவத்தை எனவும் எனக்கு நினைவு தெரிந்த காலம் தொட்டு அழைக்கப்பட்டு வருகின்றன. ஏன் எதற்கு இந்தப் பெயர்கள் வழக்கத்தில் வந்தன என நான் இன்றளவும் யோசித்துப்பார்த்ததில்லை. அதற்கான தேவையும் எனக்கிருந்ததில்லை.

நல்லூர் கோவிலின் முன் எழுதி வைக்கப்பட்டுள்ள \\போட்டோ எடுப்பதற்கான தடை\\ உத்தரவையும் மீறி மூலஸ்த்தானத்தை நோக்கி எனது கமராவில் பதிவு செய்யமுயன்றேன். அதற்கான அனுமதி கிடைக்கவில்லை. போட்டோ எடுக்காதே என்று சத்தம் கேட்டது ஓமோம் எடுக்கவில்லை என்று அமைதியாகிவிட்டேன். புலிகளுக்கும் அரசுக்குமான போர்நிறுத்த உடன்படிக்கைக்காலமது.
ஆசை தீர என் கிராமத்து சிறுவர்களையும் மழையையும் பூவையும் படமெடுத்தேன்.

புலிகளின் முகாம்கயையும், அரச இராணுவமுகாம்களையும், நல்லூர்க்கோவிலையும் தவிர போட்டோ எடுப்பதற்கான தடையுத்தரவை நான் வேறோரிடமும் காணவேயில்லை. ஊடகச் சுதந்திரமென்பது நல்லூர்க்கந்தனால் பிடுங்கப்பட்டதா? சிங்கள வைரவரால் பிடுங்கப்பட்டதா? அல்லது அரசாலும் புலிகளாலும் பிடுங்கப்பட்டதா??? கமராவை கமர்க்கட்டில் கொண்டு திருபவர்கள் யாராவது இதற்குப் பதில் சொல்வீர்களா?

சனி, 30 ஏப்ரல், 2011

தோழர் தெணியானின் வாழ்பனுபவங்கள் - ஜீவமுரளி

தோழர் தெணியானின் வாழ்பனுபவங்கள். from jeevamuraly on Vimeo.

2003ல் புலிகளுக்கும் அரசுக்குமான போர்நிறுத்த உடன்படிக்கை காலத்தின் ஆரம்பத்தில் பதிவுசெய்யப்பட்ட உரையாடல் இது. தோழன் மைக்கலும் நானும் சேர்ந்து எனது ஆசிரியரும் தோழருமான தெணியானுடன் இந்த உரையாடலைப் பதிவு செய்திருந்தோம் இடையில் உள்ள இந்த 8 வருடகாலத்தில் அதற்கான அரசியற்சூழலும் வாய்ப்பும் கிடைக்கவில்லை
இந்த உரையாடலில் இரண்டு விடயங்கள் ஊடகங்களில் பதிவு செய்யப்படுவதை அவர் விரும்பவில்லை
இருப்பினும் விமர்சனப்பாரம்பரியத்தின் ஆரோக்கியம் கருதி தணிக்கை எதுவும் செய்யாமல் வெளியிடுகின்றேன் அன்றைய புலி அரசியல் சூழலுக்கும் இன்றைய தலித் அரசியல்ச் சூழலுக்குமான அரசியல் இடைவெளியையும் முரண்பாடுகளையும் தீண்டாமையினின் தொடர்ச்சியையும் இந்த உரையாடல் நகர்த்திச்செல்கின்றது

****ஜீவமுரளி*****

திங்கள், 28 பிப்ரவரி, 2011

ஒலிகளின் அரசியல் -ஜீவமுரளி-


ஒலிகள் எப்படி உருவாகின்றன, அல்லது சத்தங்கள் எப்படி உருவாகின்றன என்பதற்கான விஞ்ஞான விளக்கங்களை நாமெல்லாம் ஏதோ ஒருவகையில் புரிந்துவைத்திருக்கின்றோம். மனிதர்கள் அவரவரின் விருப்புக்கும், வெறுப்புக்கும் ஏற்றால் போல் ஒலிகளை சத்தங்களாகவும், சந்தங்களை ஒலிகளாகவும் உணர்கின்றார்கள். அல்லது மனதில் பதிந்து வைத்திருக்கின்றார்கள். ஒலிகளும், சத்தங்களும் அரசியற்புனைவின் செல்வாக்கும் சிபார்சுகளும் பெற்றவையாக இருக்கின்றன.

புதன், 23 பிப்ரவரி, 2011

தீண்டாமைக்கொடுமைகளும் தீ மூண்டநாட்களும் -ஜீவமுரளி-

38வது பரிஸ் இலக்கியச்சந்திப்பில் நிகழ்த்தப்பட்ட
"தீண்டாமைக்கொடுமைகளும் தீ மூண்டநாட்களும்" நூலுக்கான அறிமுகம்

தோழர் யோகரத்தினம் தனது சாதியப்போராட்ட அனுபவங்களையும் தான் சந்தித்த தீண்டாமையின் கொடுமைகளையும் சிறு நூலாக பதிவு செய்திருக்கிறார். இவரின் அனுபவப்பதிவுகளின் ஒருபகுதி ஏற்கனவே வடு சஞ்சிகையில் அப்பப்போ பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. தீண்டாமைக் கொடுமைகளும் தீ மூண்ட நாட்களும் என்ற தலைப்பில் இது நூல் வடிவம் பெற்றுள்ளது.

சனி, 15 ஜனவரி, 2011

மாட்டுப்பொங்கல் நினைவாக -ஜீவமுரளி-

தடைசெய்தல், நிராகரித்தல் என்ற உளவியல் மூலங்களை கண்டடைதல்


எல்லாவற்றையும் நிராகரித்தல் என்ற அரசியல் உளவியலின் மூலங்களும், எல்லாவற்றையுமே தடைசெய்தல் என்ற அரசியலின் மூலகங்களும், எங்கிருந்து தொடங்குகின்றன என்ற கேள்விகள் என்னை பாடாய் படுத்திக்கொண்டிருக்கின்றன.

ஞாயிறு, 21 நவம்பர், 2010

Research and Analysis Wing [RAW]இன் ராசதந்திரமும், பரமார்த்த குரு சீடர்களும் -ஜீவமுரளி-


ஒற்றர்கள், உளவாளிகள் என்ற சொற்பதம் வரலாற்று கதைகள் தொடங்கி அம்புலிமாமா, சிஐடி மூசா கதைகள் வரைக்கும் வாசிக்கும் வாய்ப்பு உங்கள் பலருக்கும் கிட்டியிருக்கும். இந்த சொற்பதங்கள் பல்வேறுபட்ட மனிதர்களுக்கும் பல்வேறுபட்ட உணர்வுகளை ஏற்படுத்தக் கூடியது. பயம் திகில் நடுக்கம் மானம் பழியுணர்ச்சி பாசம் நட்பு தேசம் காதல் வீரம் கௌரவம் திமிர் மொழியுணர்வு மதஉணர்வு தந்திரம் என பன்முகதன்மை கொண்டவை. பாமர மக்களுக்கு பயம் திகில் நடுக்கத்தை ஏற்படுத்தக் கூடியது. புடித்தவர்களுக்கு மானம் தேசம் வீரம் பழியுணர்ச்சி ஆசை என்பவற்றை ஏற்படுத்தக்கூடியது. மேற்குறிப்பிடப்பட்ட உணர்வுகளை ஒற்றர்களும் உளவாளிகளும்தான் மனிதர்கள் மத்தியில் வெகுஜனமயப் படுத்தினார்கள். இதற்கான சான்றுகளை வரலாற்று கதைகள் முழுக்க தேடினால் வரிக்கு வரி பன்முகத்தன்மையுடன் இந்த உணர்வுகள் வெளிப்படும்.

வியாழன், 4 நவம்பர், 2010

பின் ஊட்டல் அரசியல்- ஜீவமுரளி

அரசியல் என்பது மக்கள் நலன் சார்ந்தது என்றுதான் நான் இன்றுவரைக்கும் நம்பிக் கொண்டிருக்கிறேன். ஆனால் அரசியல் என்பது தொழில்முறைசார்ந்தது, வியாபாரம் சார்ந்தது இலாபநட்டம் சார்ந்தது என்பதுதான் நடைமுறையாக உள்ளது. சென்ற வாரம் ஒரு தமிழ் ரவல் ஏஜன்ட் அன்பரிடம் எனது மாமியார் இலங்கைக்கு போவதற்காக ரிக்கற் வாக்குவதற்காக சென்றிருந்தேன். எனது கையை இறுகப்பற்றி குலுக்கி வரவேற்றார். எப்பிடி அண்ணை வியாபாரமெல்லாம் எப்பிடி போகுது என்று கேட்டேன். "நல்லாப் போகுது தம்பி. நல்ல பிஸ்னஸ் நடக்குது. நாங்க இப்பிடியே சும்மா இருக்கேலாது தானே தம்பி, பிஸ்னசை கொஞ்சம் பெருப்பிக்க வேணும். இப்ப சிலோனுக்கு சனம் பறக்குது. உலகத்திலேயே பயங்கரவாதம் இல்லாத ஒரே ஒரு நாடு இலங்கைதான். அதை நான் நூறுவீதம் உறுதியாக அடித்துச் சொல்வேன்" என்றார். "ஆபிரிக்காவை பாருங்கோ அங்கை பயங்கரவாதம் இருக்குது. ஏன் அமெரிக்காவிலை பயங்கரவாதிகள் இருக்கிறாங்கள்தான். ஆனா கட்டுபாட்டுக்குள் வைச்சிருக்கிறாங்கள்" என்றார் இத்தனைக்கும் தனது தந்தையார் இடதுசாரி அரசியற் பாரம்பரியத்தில் இருந்து வந்தவர் என்பதை அப்பப்போ ஞாபகப்படுத்துவார். அவரிடம் நீண்டகாலமாக நான் பிரயாணச்சீட்டு வாங்கி வருகிறேன். அதற்காக பிரயாணச்சீட்டு அவரிடம் மலிவுவிலையில் கிடைக்கின்றது என்று எண்ண வேண்டாம். தெரிந்தவர், நம்மாளு, கடனுக்கும் ரிக்கற் போட்டுத் தருவார் என்றவகையில் நான் வாடிக்கையாளனாக இருக்கிறேன். அவர் ஒரு துரோகி என்றோ இலங்கையரசின் உளவாளி என்றோ நான் என்றைக்குமே கருதியதில்லை நாளாந்தம் மகிந்தவை திண்டுகொண்டிருப்பவர்கள் திட்டிக்கொண்டிருப்பவர்கள் எல்லோரும் அவரிடம் ரிக்கற் போட்டுக் கொள்கிறார்கள். இதற்காக அவரும் வாடிக்கையாளருடனும் சேர்ந்து கூடவே நாலு திட்டுத் திட்டுவார்.

ஞாயிறு, 17 அக்டோபர், 2010

கலாநிதி சி. சிவசேகரத்துடன் ஒரு உரையாடல் -ஜீவமுரளி-

தேசம், மொழி, சாதி, பால், சிறூபான்மையினரின் உரிமைகள் சார்ந்த அரசியற் போராட்டங்களும், அவர்களின் அடையாள அரசியல் போராட்டங்களும் இறுதியில் தோல்வியைத் தழுவிக் கொள்கின்றன என்ற வாதங்களும், அவை தழுவிய உபதேசங்களும் இன்று தொடர்ச்சியாக வலியுறுத்தப் பட்டுக்கொண்டு வருகின்றன. இவை தோல்விகளைத் தழுவிக்கொள்ளும் என்று ஏற்கனவே எங்களுக்குத் தெரியும் என முன்முடிவுகளை அன்று சொன்னவர்களும், இன்று சொல்பவர்களும் பாலஸ்தீனத்தையும், குர்திஸ்தானையும், முள்ளிவாய்க்காலையும் உதாரணங்களாக மீண்டும் வலியுறுத்துகின்றனர். தேசம், அடையாளங்கள் சார்ந்த போரட்டங்களின் தோல்வி என்பன ஏகாதிபத்தியங்களினதும், வல்லரசுகளினதும் சதி என ஒற்றை வரியில் விளங்கப்படுத்தப் படுவனவாயும், ஒற்றைவரியில் விளங்கப்பட வேண்டிய சூத்திரமாகவும் ஆக்கப்பட்டுள்ளது.

வாழ்க தோழர் சங்கமித்தை! -ஜீவமுரளி-

(உயிர்மெய் தொகுப்பு 2009)
 
தோழர்களே!
மாற்றுக்கருத்தாளர்களே!
முன்னைநாள் மாற்றுக்கருத்தாளர்களே!

பௌத்தத்தை தழுவிய சங்கமித்தையையும், அம்பேத்காரையும், அயோத்திதாசரையும், என்னையும் போலல்லாது, மகிந்த சிந்தனையை மட்டும் தழுவியவர்களுக்காக நான் ஓரிரு கதைகளும், ஓரிரு கருத்துக்களும் சொல்ல ஆசைப்படுகிறேன். கூடவே என் கனவுகளையும் சொல்ல அனுமதி தரும்படி உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

வரலாறு யாரையும் விடுதலை செய்ததில்லை ஜாரையும் விட்டு வைத்ததில்லை

-ஜீவமுரளி -(25 october 2009)

வரலாறுகளிலிருந்து பாடங்களை கற்றுக் கொள்ளவேண்டும் என்ற தத்துவம் முன் எப்போதையும் விட இன்று பரவலாகவும் அடிக்கடியும் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது. அல்லது பரவலாக பல அர்த்தங்களில் அடிபட்டுக் கொண்டிருக்கிறது. யாருடைய வரலாற்றிலிருந்து யார் பாடம் கற்றுக்கொள்வது? யாரிடம் கற்றுக்கொள்வது? யாருக்காக கற்றுக்கொள்வது? என்ற முரண்நகையான சந்தேகங்களை மாக்சிடம் கேட்பதற்கு அவரும் உயிருடன் இல்லை. ஜார் மன்னனிடம் என்னதான் கற்றுக்கொண்டீர் எனக் கேட்பதற்கு லெனினும் இல்லை. இப்படி ஒரு துர்ப்பாக்கிய சூழலில் நாங்கள் வாழ்ந்து வருகின்றோம்.

-உயிர்மெய் 2009 மலரிலிருந்து-
எனது வரலாறு ஆயிரத்துத் தொளாயிரத்து எண்பத்தி நான்காம் ஆண்டு மார்ச் மாதம் பதினைந்தாம் திகதி தாயாரின் பிறந்தநாள் அன்று தொடங்குகின்றது. அன்று தமிழீழம் காணுவதற்காக கள்ளத் தோணியில் வல்வெட்டித்துறையில் இருந்து புறப்பட்டு வேதாரணியத்தில் கால்வைத்து இன்று ஐரோப்பாவில் வாழ்ந்து வருகிறேன்.

மண் மீட்பு போரும் ரைக்ரர் மகேந்திரண்ணையும் -ஜீவமுரளி-

புலிகளின் அழிவின் முன் சொல்ல முடியாமல்ப் போன
இரகசியங்களும் பரம இரகசியங்களும்!

“ஒரு கிராமத்திலோ அல்லது ஒரு கூட்டத்திலோ உன் எதிரி இருக்கிறான் என சந்தேகப் படுவாயானால், அந்தக் கிராமத்தையே அழி. அந்தக் கூட்டத்தையே கொன்றொழி” இது 1984ல் இந்திய இராணுவ ஜவான்கள் தமிழ் விடுதலை இயக்கப் பொடியங்களுக்கு பயிற்சி அளித்து போராட அனுப்பிவைக்கும் பொழுது சொன்ன கொலை மொழி. இதுவே இன்றுவரைக்கும் இந்திய அரசின் வெளிநாட்டுக் கொள்கையாக இருந்து வருகிறது. இந்த இராணுவ யுக்தியே புலிகளை வைத்து சக இயக்கங்களை அழிப்பதற்கும், மகிந்தவின் அரசை வைத்து புலிகளை இராணுவரீதியாக ஒழித்துக்கட்டவும் பாவித்திருக்கின்றது.

உத்தப்புரம் இரண்டாம் பாகம் - நெடுங்குருதி மூன்றாம் பாகம்

-ஜீவமுரளி-
(வெளிச்சத்தில் பேசுவோம்-2008)

ஊடகவியலாளனும் தோழனுமான சரவணன் மீதான வன்முறைத் தாக்குதல் ஒரு கிளாஸ் தாக்குதல் விவகாரமாக மட்டும் ஏன் பார்க்கப்படுகிறது? வன்முறைக்கும் மாற்றுக் கருத்துக்கும் குரல்கொடுக்கும் இணையத் தளங்கள், தோழர்கள் என பலரும் ஏன் மௌனமாக இருந்தனர்? ஒரு சிலரைத்தவிர இக்கேள்வி யாரையும் உறுத்துவதாக தெரியவில்லை.

மகேஸ்வரி வேல்-ஆயுதம் EPDPக்கு பின்

அவதூறுகளை செய்கின்ற மாற்றுக்கருத்து தோழர்களுக்கும், அவதூறுகளையும் அவமானங்களையும் எதிர்கொள்கின்ற மாற்றுக் கருத்து தோழர்களுக்கும், அவமானங்களைப் படுகின்ற தோழர்களுக்கும் இதை சமர்ப்பணம் செய்கிறேன்.               -ஜீவமுரளி-

அவமானங்களையும், அவதூறுகளையும் மரணம்வரையும் சுமந்து திரிகின்ற, கல்லோலை என்ற பெயரால் நிந்திக்கப்பட்ட, அவதூறு செய்யப்பட்ட அவமானப்படுத்தப்பட்ட விளிம்பு நிலைத் தலித் கிராமத்தின் கதை இது.

சனி, 16 அக்டோபர், 2010

கடவுளே ஏன் என்னைக் கைவிட்டீர்? -ஜீவமுரளி-

மகேஸ்வரி வேலாயுதம்
EPDPக்கு முன்

பதினாறு ஆயுத இயக்கங்கள் முளைவிட்டிருந்த 1985ன் காலப்பகுதிக்கு முன்பே "தமிழர் தகவல் நடுவம்" என்றொரு அமைப்பு மதுரை நரிமேட்டில் இருந்துகொண்டு தமிழர்களுக்கு நடக்கும் கொடுமைகள் பற்றி பிரச்சாரமும் செய்துகொண்டு சாப்பாட்டுக் காசில்லை என்று வரும் எல்லா இயக்க பொடியங்களுக்கும் காசு கொடுத்துக் கொண்டிருந்தது. அங்கே புலிகள் தொடக்கம் குட்டி இயக்கங்கள்வரை காசு வாங்க வந்து போய்கொண்டிருந்தன.  -ஜீவமுரளி-

1984-இன் நடுப்பகுதிகளில் சென்னையில் உள்ள சாலிக்கிராமத்தில் ரெலோத்தலைவர் சிறிசபாரத்தினத்தின் அலுவலகத்தில் ஒரு அழகிய இளம்பெண் தலைவருடன் சிரித்துச்சிரித்து கதைத்துக் கொண்டிருப்பதாக கதை பரவிக் கொண்ருந்தது. ரெலோதலைவரின் கட்டைபிரமச்சரியத்திற்கு அந்த அழகிய இளம்பெண் ஆப்பு வைத்துவிடப் போகின்றா என்ற சந்தேகம் பெடியங்களுக்கு ஏற்பட்டது. ஆனாலும் தவைரில் உள்ள விசுவாசமும் நம்பிக்கையும் சந்தேகங்களை தவிர்க்க முற்பட்டன. கேள்வி கேட்டல் சந்தேகப்படல் என்பன தற்கொலை செய்துகொள்ததற்கு ஒப்பான சூழல் அது. அந்த இளம்பெண் மரியாதைக்கு உரிய ஒருவராக ரெலோ பெடியங்களால் அணுகப்படவோ பார்க்கப்படவோ பேசப்படவே இல்லை. ஒரு பெண் தலைவருக்கு முன் சரிக்குசமமாக இருந்து அதுவும் சிரித்துச் சிரித்து அரசியல் பேசிக் கொண்டிருப்பது பெடியங்களுக்கு எரிச்சலையும் ஆச்சரியத்தையும் தந்தன.

வியாழன், 30 செப்டம்பர், 2010

ஒரு கதை

-ஜீவமுரளி-

கனவுக்கும் கடவுளுக்கும் நடுவே
சூரியனுக்கு சற்றருகே


அழியும் நினைவுகளை மீட்டெடுத்து, மீட்டெடுத்த நினைவுகளை அழிக்கும் வழமையில் வாழும் நான், கனவுகளே வராத ஒரு தூக்கத்தை வேண்டி நிற்கின்றேன். கனவுகள் தூக்கத்தின் எதிரிகள் கனவுகள் மனிதர்களின் எதிரிகள். கனவுகள் நினைவுகளை மீட்டெடுக்கும் நோய்க்கிருமிகள். கனவே உன்னை இரந்து கேட்கிறேன் என் தூக்கத்தை கலைக்காத கனவொன்றை நான் காணவிரும்புகிறேன். என் நினைவுகளை அழித்துவிட்டு வருகின்ற கனவொன்றை நான் காண விரும்புகிறேன்.